எழுதுகோல் வரலாறு
பழங்காலத்து எகிப்தியர் பாப்பிரசு (papyrus) சுருள்களில் எழுத சிறு நாணலால் (reed) ஆன எழுதுகோல்களைப் பயன்படுத்தினர். இந்த நாணல் போன்ற செடிக்கு சங்க்கசு மாரிட்டிமசு Juncus Maritimus என்று பெயர்[2]. சிட்டீவன் ரோச்சர் ஃவிசர் (Steven Roger Fischer) தான் எழுதிய எழுதுதலில் வரலாறு A History of Writing என்னும் நூலில் எகிப்தில் சக்காரா என்னும் இடத்தில் கிடைத்துள்ள சான்றுகளின்படி நாணல்-போன்ற எழுதுகோல்கள் எகிப்திய அரசர்களின் முதற்பரம்பரையினர் காலத்திலேயே, அதாவது கி.மு 3000 ஆண்டு தொடக்கத்திலேயே வழக்கில் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றார். ஏறத்தாழ இன்றைக்கு 300-400 ஆண்டுகளுக்கும் முன் வரை, கி.பி. 17 ஆவது நூற்றாண்டு வரை, இந்த நாணல்-போன்ற எழுதுகோல்கள் இருந்தன.
பறவைகளின் இறகாகிய தூவல் (quill) எழுதுகோல்கள் இசுரேல்-பாலசுத்தீனத்தில், மேற்குக் கரை என்னும் பகுதிக்கு அருகே உள்ள கும்ரான் Qumran என்னும் இடத்தில் இருந்து கிடைத்த செத்தக் கடல் சுருள்கள் Dead Sea Scrollsஎழுதப் பயன்படுத்தப்பட்டன. ஐரோப்பாவில் இப்பழக்கம் கி.பி 700களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வகை தூவல் எழுதுகோலே 1787 இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் சட்டம் எழுதவும், கையெழுத்திடவும் பயன்பட்டது. செத்த கடல் சுருள்கள் 1947 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அது கி.மு 100 இல் எழுதியதாகக் கருதப்படுகின்றது. ஐரோப்பியர்கள் நாணல் போன்ற குழல்கள் கிடைக்காததால் தூவல் எழுதுகோலை வரவேற்றனர். செவில்லைச் சேர்ந்த கி. பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித இசிடோர் St. Isidore of Seville அவர்கள் எழுதி வைத்துள்ளதில், தூவல் எழுதுகோலைப் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. . தூவல் எழுதுகோல்கள் 19 ஆம் நூற்றாண்டு வரையில் வழக்கில் இருந்தன
வெண்கலத்தால் ஆன எழுதுகோல் நுனி உடையது ஒன்று கி.பி 79 ஆம் ஆண்டிலேயே பயன்பாட்டில் இருந்தது என்பற்கான சான்றுகோள் அழிந்து பட்ட பாம்ப்பை நகரில் கிடைத்துள்ளது. . சாமுவேல் பெப்பீசு என்பாரின் தன்வாழ்க்கைக் குறிப்பேட்டில் ஆகசட்டு 1663 ஆம் ஆண்டிற்கான பதிவில் இது பற்றிய குறிப்பொன்றும் உள்ளது. 1803 இல் மாழையால் (உலோகத்தால்) ஆன எழுதுகோல் நுனிக்கான காப்புரிமம் ஒன்று உள்ளது ஆனால் செய்து விற்பனை செய்யவில்ல்லை. 1822இல் பர்மிங்காம் என்னும் இடத்தைச் சேர்ந்த சான் மிட்செல் (John Mitchell) மாழை நுனி உடைய எழுதுகோல்களை அதிக எண்ணிக்கையில் படைத்து விற்பனை செய்தார்.
Comments
Post a Comment